Monday, August 27, 2012

தத்துவ போதனை....


ஆர்பரிக்கும் வெள்ளப்
பெருக்கோடு உருண்டோடிய
நதிகளெல்லாம்
வறண்டு வயோதிகத்தின்
கோடுகளை காட்டுகிறது...
வானில் மின்னுகின்ற
வைர மூக்குத்திகளான
நட்சத்திரங்கள் இன்றி
நீல வானம் கூட
மூளியாகி காட்சியளிக்கிறது...
தோட்டத்தில் கலகலவென
சிரித்து விளையாடிய
நட்டு வைத்த செடி
இப்போதெல்லாம் பூத்து
குலுங்குவதில்லை...
மேனியை மெல்லென தடவி
ஓடி விளையாடிய
தென்றலுக்கு நேரமில்லை
அனல் காற்று
ஆளை கொல்கிறது...
இனிப்பை ஊட்டி வந்த
கரங்கள் இப்போதெல்லாம்
கசப்பை கையிலேந்தி
வெறுப்பை முகத்திலேந்தி
எல்லாம் காலமாற்றம்...
ஏனிந்த தீடீர் மாற்றம்
எதற்கிந்த ஏமாற்றம்
கால தேவனின் கட்டளையா
மாற்றங்கள் மாறததென்ற
தத்துவ போதனையா...
எதிர்பார்ப்புகளின் உச்சத்தில்
ஏற்றி வைத்து
எதிர்பாரா தருணத்தில்
ஆளை ஏமாற்ற படுகுழியில்
தள்ளி புதைக்க பார்க்கிறது...
இப்போதெல்லாம் ஒவ்வோர்
நிமிடமும் அடிக்கடி
ஏமாற்ற நகருக்குள்
பிரவேசித்து பெருமூச்சு விடுகிறது
நரகமாகி போனதை உணர்ந்து...
ஆனாலும் ஏமாற்றத்தை
விரும்பியே நித்தமும் நினைத்து
வாழ ஆசைப்படுகிறேன்
வாழ்க்கையின் இனிப்பை கசப்பை
சேர்ந்து கற்று தந்தமைக்காக...

No comments:

Post a Comment