Sunday, July 31, 2011

வறண்ட மரம்


கண்ணே என்றான்
கனியமுதென்றான்..
வாழ்ந்தால் உன்னோடு
இல்லை நான் மண்ணோடு...
வண்ணமழை சொல்களால்
காதல் வலை விரித்தான்...
கனிமொழி பேசி காதல்
யாத்திரைக்கு அழைத்தான்...
என்னவள் நீயென்று சொல்லியே
என்னிதயம் கவர்ந்தான்...
காதலெனும் கடலினிலே நாமிருவரும்
கரம்பிடித்தே கரையேறுவோம் என்றான்...
கட்டுதளைகள் தகர்ப்போம் காதலே
வெல்லுமென ஊரார் அறிய செய்வோம்...
நயவஞ்சக வார்த்தகள் பேசியே
நம்ப வைத்தான் என்னையே...
நான் வீட்டை விட்டோடினேன்
நான் நல்லவன் என நம்பியவனோடு...
ஆலயம் முன்னிறுத்தி மூன்று முடிச்சிட்டு
ஆண்டவன் நடத்திய திருமணமென்றான்...
அவன் பின்னே நான் சென்றேன்
அறுப்பிற்கு போகும் ஆடு போல...
காமவேள்வி நடத்த கட்டிலறை அழைத்தான்
காதல் கணவனல்லவா நானும் இசைந்தேன்...
காலையில் கண் விழித்தேன் திடுக்கிட்டேன்
காணவில்லை என்னை மணந்த கயவன்...
என் அங்கத்தில் மின்னிய தங்கத்தோடு
என்னவன் என நம்பியவன் ஓடியே போனான்...
வேந்த புண்ணிலே வேலை பாய்ச்சியதாய்
விற்றிருக்கிறான் என்னை சதை வியாபாரியிடம்...
கும்பிட்டேன் குரல் கொடுத்தேன்
காப்பாற்றுவார் இல்லை..
சதையை விற்று உயிர் வளர்க்கும்
சாக்கடை தொழிலாளியானேன்...
விதி வந்து வலை வரிக்க மதிகெட்டே
விலைமாதென்ற பட்டம் பெற்றேன்..
காமமிருகங்களின் உடற்பசிக்கு என்னுடல்
கடைவிரிக்கப்பட்டது அன்று முதல்...
சில இரவுகள் வடித்தேன் ரத்தக்கண்ணீர்
சிந்திட கண்ணீர் இல்லாமல் வறண்டது பிறகு...
மரமாய் தான் நானுமானேன்
மனித மிருகங்கள் முன்னால் நானும்...
உயிர் மட்டும் எமக்குண்டு
உணர்வோ மறத்து போய் நாளாயிற்று...
துயர் துடைக்க யாரும் இல்லை
துன்பங்களோ கடலின் எல்லை...
விரும்பியா நானானேன் விலைமாதாக
விரும்பியவனின் நயவஞ்சகத்தாலே தானே...
கயவனை நம்பி வாழ்கையை தந்ததற்காக
கறையாகி போனது என் வாழ்வு...
எரிகின்ற விளக்காய் என் வாழ்வு
எய்ட்ஸ் நோயாளியாய் இன்று...

No comments:

Post a Comment